பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகைதிருப்பேராயத்தின் தலைவராக திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அ
சுவிற்சலாந்து நாட்டின் பாசல் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்கள் உரோமை வத்திக்கான் திருப்பீடத்தின் கிறீஸ்தவ சபைகளுக்கிடையிலான ஒன்றிப்பினை முன்னெடுத்துச் செல்லும் திருப்பேராயத்தின் தலைவராக திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பேராயத்தின் தலைவராக இதுவரை பணியாற்றிய கர்தினால் வோல்ரர் கஸ்பர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்கள் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்கள் 1950ம் ஆண்டு சுவிற்சலாந்து நாட்டின் இம்மன்புறுக்கே என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தனது 32வது வயதில் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். பின்னர் 1995ம் ஆண்டில் பாசல் மறைமாவட்ட ஆயராக நியமனம் பெற்றார். 2007 –2009 வரையான காலப்பகுதியில் சுவிஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றினார்.
ஆயர் பேரருட் கலாநிதி கூர்த் கொக் ஆண்டகை அவர்களின் பணி சிறக்க சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் செபமும், வாழ்த்துக்களும்.
21.07.2010
திருத் தந்தைக்காகச் செபிப்போம்.
திருத் தந்தைக்காகச் செபிப்போம்.
16.04.2010
ஆசா.இரண்டாம் அருள் சின்னப்பரின் கல்லறைக்குச் செல்லவேண்டும் - முகமட் அலி அகா .
30 வருடங்களுக்கு முன் மறைந்த திருத்தந்தை ஆசா.இரண்டாம் அருள் சின்னப்பரைக் கொலை செய்யும் நோக்கோடு துப்பாக்கியால் திருத்தந்தையைச் சுட்டுக் காயப்படுத்திய துருக்கி நாட்டைச் சேர்ந்த முகமட் அலி அகா( தற்போது 52 வயது) துருக்கிய சிறைச்சாலையிலிருந்து தை மாதம் 18ம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1981ம் ஆண்டு வைகாசி மாதம் 13ம் திகதி வத்திக்கான் தூய பேதுருவானவர் சதுக்கத்தில் திருவழிபாட்டிற்காக பிரசன்னமாகியிருந்த மறைந்த திருத்தந்தை ஆசா.இரண்டாம் அருள் சின்னப்பரைக் கொலை செய்யும் நோக்கோடு துருக்கி நாட்டைச் சேர்ந்த முகமட் அலி அகா துப்பாக்கியால்; சுட்டுக் காயப்படுத்தினான்.
விசாரணைக்குப்பின் இத்தாலிய நீதி மன்றம் முகமட் அலி அகாவிற்கு ஆயுட் காலச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஆனால் திருத்தந்தை ஆசா. இரண்டாம் அருள் சின்னப்பர் 1983ம் ஆண்டு ; சிறைச்சாலைக்குச் சென்று முகமட் அலி அகாவைச் சந்தித்து அவருக்கு மன்னிப்பு வழங்கினார். 19 வருட இத்தாலிய சிறை வாழ்வின் பின் 2000ம் ஆண்டு திருத் தந்தையின் அனுசரணையோடு இத்தாலியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். விடுதலை பெற்றுத் துருக்கி சென்றபோது அந் நாட்டில்1979ம் துருக்கிய பத்திரிகையாளர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக இவர் மீண்டும் அங்கு சிறைத் தண்டனை பெற்றார்.
இவர் திருத்தந்தையைக் கொலை செய்ய முயன்றதற்கான காரணங்கள் இது வரை தெளிவாகவில்லை. இவர் தனது முதல் வாக்கு மூலத்தில் தான் இதனைத் தனியாகவே திட்டமிட்டுச் செய்ததாகவும், பின்னர் சோவியத் KGB அமைப்பும், பல்கேரிய முகவர் அமைப்பொன்றும் பின்னணியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முகமட் அலி அகா, தான் விடுதலையாவதற்கு முன்னர் தனது வழக்கறிஞர் மூலமாக பல எழுத்து மூலமான அறிக்கைகளை விடுத்துள்ளார். அவற்றுள் மிக முக்கியமாக தான் வன்முறையையும், பயங்கர வாதத்தையும் வெறுப்பதாகவும்: ஒசாமா பின்லேடன், அடோல்வ் கிட்லர் ஆகியோர் சமயங்களினதும், உலகத்தினதும் பொது எதிரிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருத்தந்தை ஆசா.இரண்டாம் அருள் சின்னப்பரின் கல்லறைக்குச் செல்லவேண்டுமென்பது தனது மிகப்பெரும் விருப்பங்களுள் ஒன்றாக இருக்கின்றது எனவும் தான் வத்திக்கானுக்குச் செல்லவேண்டு மெனவும் அவர் கேட்டுள்ளார். இது பற்றி இத்தாலிய தொலைக் காட்சிக்குக் கருத்துத் தெரி வித்த திருப்பீடத்தின் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆலோசகர் குழுவின் தலைவர் கர்தினால் பீற்றர் தூர்சன்: முகமட் அலி அகா திருத்தந்தை ஆசா. இரண்டாம் அருள் சின்னப்பரின் கல்லறைக்குச் சென்று செபிப்பதற்கு எது விதமான தடையோ அன்றேல் முரண்பாடுகளோ இல்லையென்றும் ஆனால் வத்திக்கானுக்கு வரும்போது பெரும் எண்ணிக்கையான பாதுகாப்புப் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டுமெனவும் கூறினார்.
20.01.2010
சுயநலம் ,மனித உயிர்களை மதியாமை என்பன எம்மை அழிவுக்கே இட்டுச்செல்லும்
சுயநலம் ,மனித உயிர்களை மதியாமை என்பன எம்மை அழிவுக்கே இட்டுச்செல்லும்: என வத்திக்கானோடு உறவைக்கொண்டுள்ள 178 நாடுகளின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் இம்மாதம் 11ம் திகதி உரையாற்றிய திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் தெரிவித்தார். போர், பட்டினி, அடக்குமுறை, சுற்றாடலை சீரழித்தல், தற்கால பொருளாதார நெருக்கடி என்பன உண்மையாகவே சுயநலத்தினதும் , மனித உயிர்களை மதிக்காததினதும் விளைவாகும் என அவர் மேலும் தெரிவித்தார். இச் சந்திப்பின்போது திருத்தந்தையவர்கள் இந்நாடுகளின் தூதுவர்களைத் தனித் தனியாகச் சந்தித்து உரையாடினார். ,
12.01.2010
இறைவனின் படைப்பைப் பாதுகாப்போம். திருத்தந்தை.....16ம் ஆசீர்வாதப்பர்
இறைவனின் படைப்பைப் பாதுகாப்போம்.
"இயற்கையின் இயல்புத் தன்மையைச் சீர்குலைப்பது அல்லது சீரழிப்பது இன்று அறநெறியைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது அமைதிக்கும் , மனித வாழ்விற்கும் மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எம்மைச் சுற்றி நிகழ்பவை பற்றி நாம் அக்கறையற்றவர்களாகவோ அல்லது அலட்சியப் போக்கு உடையவர்களாகவோ இருந்துவிட முடியாது. இயற்கையின் அல்லது உலகின் ஏதாவது ஒரு பகுதியையேனும் சீர்கெடுப்பது எம் அனைவரையும் பாதிக்கின்றது". எனத் திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் தனது உலக அமைதித் தினத்திற்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் "இயற்கையையும் சுற்றாடலையும் நாம் பாதுகாக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார். அத்தோடு மனித இனம் இன்று மிகப்பெரிய அல்லது ஆழ்ந்த ஒரு கலாச்சாரப் புதுப்பித்தலை வேண்டி நிற்கின்றது. உலகில் அமைதியைக் கட்டியெழுப்ப இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது பொறுப்பு வாய்ந்த ஒவ்வொருடையவும் கடமையாகவுள்ளது. இது இன்று மிகவும் அவசியமான ஒரு சவாலாக அமைந்துள்ளது. இதனை ஒவ்வொருவரும் ஒத்திசைந்த அர்ப்பணத்தோடும் , புதிய சிந்தனையோடும் எதிர்கொள்ளவேண்டும். இது எதிர்காலச் சமூகத்திற்கு வளமான ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க எமக்கு கிடைக்கும் ஒரு தெய்வீக வரப்பிரசாதமாகவும் அமைகின்றது". எனவும் குறிப்பிட்டுள்ளார்.